வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஒப்பாரி


வீதியெங்கும்
தோற்ற மறைவுக் குறிப்புகள்
செதுக்கப்பட்ட
பலகோடிக் கல்லறைகள்...

மலர்ந்து சில நாட்கள்கூட
நிறைவுபெறாத
பல்லாயிரம் உயிர்கள்
சமாதியினடியில்
சமாதானம் பேசிக்கொண்டிருந்தன

அதனிடையே
காதலின் ஒட்டுமொத்த
தகிப்பில் கரைந்துகிடந்தன
அந்த உடல்கள்... முன்பொருநாளில்...

அவள் அவனாயும்
அவன் அவளாயும்...
உருமறந்து பிதற்றியது
காதல்..

இப்பொழுது
அவளைப்புதைத்த குழியில்
நடுகல் நட்டுக்கொண்டிருந்தான் அவன்...
அவன் கல்லறைக்கு
மலர்வளையம்
வைத்துக்கொண்டிருந்தாள் அவள்...

மார்பிலடித்தபடி
கதறியழுதுகொண்டிருந்தது
காதல்...

வியாழன், 3 மே, 2012

தடம்..






உன் சன்னதி 
மிருகத்தை மனிதனாக்குகிறது..
மனிதனை ஞானியாக்குகிறது... 
பின்னர் கடவுளாயும்.. 


என் கவிதைகள் 
தீண்டவியலாத 
அயல்கிரகத்து
மாளிகையில் நீ 
அயர்ந்துகொண்டிருக்கிறாய்...

உன் வாசல்வரை
பயணித்து உன்னால்
வாசிக்கப்படாமலேயே
திரும்பிவிடுகிறது
என் கவிதை... 

உன் தடத்தைப் பின்பற்றுவோர் பக்தர்கள்...
உன் பாதத்தைத்
தொட்டுணர்வோர் சித்தர்கள்...

படைத்தது நீ....  
ஆனால் பகுத்தது..? 

பதில் வேண்டுபவர்க்கு
பதிலாய்க் கேள்வி கிடைக்கிறது...
உனக்கென்ன தகுதி...? 

பக்தனின் கண்ணீர் 
சித்தனுக்கே கேட்பதில்லை...
பின்னர்
புத்தனுக்கு எப்படிக் கேட்கும்..?? 

பகுதி விகுதிகளைப்
பரிசீலிக்கும் முன்னரே
தீர்க்கப்பட்டுவிடுகிறது
என் தகுதி... 

வாழ்க்கைச் சக்கரத்தில் 
சுற்றிச்சுற்றி வந்தாலும் 
உன் தடத்தைச்
சந்திக்க முடிவதில்லை - என்றாலும்
உன்னைத் தவிர வேறொன்றைச்
சிந்திக்கவும் மனம் ஒப்பவில்லை...

உன்னைத் 
தொட்டுணர முயன்று
தோற்றுப்போன
தீண்டத்தகாத வார்த்தைதான்
இந்தக் கவிதையும்...

திங்கள், 9 ஜனவரி, 2012

வேசம்...


யார் யாரோ அந்த
வருகைப் பதிவேட்டில்
தம்மைப் பதிந்துகொள்கிறார்கள்...

சில வரவுகள் மீது
பலருக்கு சந்தேகம்...
சிலருக்குத் தம் வரவில்கூட...

ஆரம்பவிதிப்படியே
அத்தியாயம் துவங்குகிறது...
பின்பு விதிகள் தத்தமக்கென
துவக்கப்படுகின்றன...

பலர் தமக்கான வாழ்க்கையைத்
தாமே தேர்ந்தெடுக்கிறார்கள்...
சிலர் பிறர் வாழ்வைத்
தமதாக்கிக் கொள்கிறார்கள்...

எல்லாமும் தமக்காய் இருப்பதே
எல்லோரின் ஏக்கமும் - ஆனால் இதுவரை
எதுவும் எதுவாயும் இருந்ததேயில்லை...

எதிர்பார்ப்புகள்கூட
எதிர்ப்புகளாகிவிடுகின்றன
சிலருக்கு..
பலருக்கு எதிர்ப்புகளே
எதிர்பார்ப்பாயும்...

ஏமாற்றுவோர் ஏமாற்றுவதற்காகவும்
ஏமாளிகள் ஏமாறுவதற்காகவும்
இதைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர்...

இறுதிவரை யாரும் தம்
சுயத்தை அடையாளப்படுத்துவதில்லை...
அதை விரும்புவதுமில்லை... 

எல்லோரின் சுயமும் அந்தக்
காணாமல்போனோரின் பட்டியலில்
தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது... 
 
உண்மைதான்...
எல்லோரும் அந்த வருகைப்பதிவேட்டில்
தம்மைப் பதிந்துகொள்கிறார்கள்...
எப்பொழுதும்போல ஆரம்பவிதிப்படியே
அத்தியாயங்கள் ஆரம்பிக்கின்றன... 

பலர் தமக்கான முகமூடிகளைத்
தாமே தேர்ந்தெடுக்கிறார்கள்...
சிலர் பிறர் முகமூடிகளைப்
பிடுங்கி அணிந்துகொள்கிறார்கள்...

வெள்ளி, 6 ஜனவரி, 2012

கிழிசல்

ஏழரைக்கோடிகள்
நிறைந்த சமுதாயத்தை
வெறும் ஒன்றரைக்கோடி
ஒன்றுக்கூடிக்
காறித்துப்பிய கதை...
தமிழ்ச்சரித்திரம் தெறிக்க
தமிழீழம் உமிழும்
அந்தக் காதை...

இறையாண்மைக் கதைபேசி
இருக்கும் மனிதம் தொலைத்து..
இந்தியம் எனும்
வீரம் தொலைத்தோம்...

ஒட்டுக்குழுக்களாய்
உடைந்துபோய் கிடக்கிறோம்...
தட்டுத்தடுமாறி
சிதைந்துபோனது சுதந்திரம்...

தன்னலச் சாக்கடையில்
சிக்கித் தவிக்கிறது நம்பிக்கை...
உன்னலம்பாராட்ட
ஊனப்பட்டது தமிழீழம்...

இனமான
எழுச்சிப்போரென்று
வெறும்கதை பேசிப்பேசி
பல லட்சம் மக்களை
ஏதிலிகள் ஆக்கினோம்..

சிலலட்சம் மக்களின்
சிதிலம் தொலைத்தோம்...

உணர்ச்சிமிகு தமிழா
எழுந்துவா தமிழா...
கூக்குரல்கள் வெறும்
கூச்சலாகிப்போனதிங்கே..

தமிழனாகவே உன்னால்
ஒன்றுபட இயலவில்லை..
மேலுக்கு ஏன்
இந்த இந்தியம் எனும் வெங்காயம்...?!

மீளாத் துயரில்
யாம் பெற்ற வேதனையில்
உலகம் அழுதது..
அதைக்கண்டு எம்
இந்தியம் சிரித்தது...
உண்மையில் உள்ளன்பு
ஒற்றுமையாய் இருந்திருந்தால்
உதவிக்கு இன்னும் சில
மாநிலங்கள் வந்திருக்கும்...

செத்துப்போன அவ்வுலகில்
நீதி ஜெயித்திருக்கும்...
பித்துப்பிடித்த இளைஞர்தம்
வாழ்வு ஜொலித்திருக்கும்...

ஊர்வலம், உண்ணாவிரதம்
பொதுக்கூட்டம் என்று பல
நாடகங்கள் அரங்கேற்றம்...
ஊடகங்கள் திசைமாற்றம்...

சொந்தத் தொலைக்காட்சியில்
சொந்தங்கள் தொலைந்த கதை
சொல்ல மறுத்ததில்
கூனிக்குறுகி முக்காடிட்டது
எம் தேசப்பற்று

உங்கள்
சுயலாபப் பித்தில்
அவர்கள்
சுதந்திரம் பறிக்கப்பட்டது...

ஈழ மக்கள்
திருப்தியடைந்ததாய்
சகட்டுக்கு பேசி
சரித்திரம் தொலைத்தோம்...

மகிழ்ச்சியடைந்ததான்
ராஜபக்ஷே...

பிணந்தின்னு கழுகுகூட
இறந்தபின் சதையுண்ணும்..
இனந்திண்ணி பக்ஷேயோ
இருக்கும்போதே
இரத்தம் குடித்தான்...

அவலங்களைத் தாங்கி
அறப்போர் செய்யும் வேளையில்
கோஷ்டிப்போசலில்
குற்றம் புரிந்ததால்
நீதிதேவதையின்
நெற்றியை பிழந்தது விதி...
வெற்றியடைந்தது சதி...

இன்னும் 
சொல்லத்தான் துடிக்கிறது..

துயரப்படும் ஈழச்
சகோதர்களுக்காய்
இப்பொழுதும்
என்ன செய்து
கிழித்திருக்கிறோம் நாம்...?


திங்கள், 5 டிசம்பர், 2011

நீக்குப்போக்கு

இந்த
நீக்குப்போக்கு
புரிவதேயில்லை...
ஊழல் ஒழிப்புச்சட்டத்தில்
உடன்பாடில்லையென 
பாராளுமன்றத்தில் அமளி... 

பணக்கார வயிறுவளர்க்க 
ஏழ்மையின் வயிற்றிலடிக்கும் 
புதிய ஜனநாயகம்... 
கேள்விகேட்போர் வாயடைக்க 
இல்லந்தோரும் இலவசங்கள்... 
இன்புற்ற பிச்சைக்காரர்கள் 
வீதியெங்கும்... ?!  

வாக்குச்சீட்டினடியில்
தஞ்சம்புகுந்த திருப்தியில்

எது புண்ணியம்?
எது கண்ணியம்?
போதிக்க முடியாமல்
சிரித்தபடி பித்தன் காந்தி... 

ஊழல் கோடிகள்  விதைக்கப்பட்டதில் 
புரையோடிப் புதைக்கப்பட் 
இறையாண்மை... 

முயலாமையோ இயலாமையோ
பீடித்துத் தின்றதில் காலிழந்து
கோலூன்றித் திரியும்
நேற்றைய இளைஞனின்
தோற்ற நரைமுகம்...
 
ஒன்றுக்குப் பத்தாய் பளீரிடுகிறது..
நேர்மையற்று நொறுங்கிய
ஜனநாயகக் கண்ணாடியில்...

திகார் சிறை புகார்
வீணென்ற வெற்றிக்களிப்புகள் 
சற்று ஆச்சர்யத்துடன்
கேள்விக்குறியிடுகின்றன
ஊழல் எங்கள் தேசிய குணமென்று..?! 

எல்லாம் கண்ணெதிரிலேயே
அரங்கேறியிருக்கின்றன... 
என்றாலும்...

இந்த நீக்குப்போக்கு
புரிவதேயில்லை...
நாளைய வல்லரசின்
நொண்டிக்கால்களுக்கு...

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

செல்லாக்காசு..


ஆட்சியில் அமர்ந்தவன் நிதம்
காசுபார்க்க நினைந்ததில்
மீட்சி பெற வழியற்று
மாசுபட்டுப்போனது ஜனநாயகம்...

பிச்சையெடுப்பது குற்றம்தான்...
பிடுங்கித்தின்பது திறமை...??
சுயலாபப்பித்தின்முன்
பிச்சையெடுக்கிறது மனிதாபிமானம்...

தனியார்மத்தில் நிலைகுலைந்து
சில கோடிகள் ருசித்துக் கொழுத்ததில்
கல்வியும் களவானிகையில்
சிக்கிச் சிதைந்தது...
கல்விக்கடவுளின்  நெற்றியில்
காசைப் புதைத்து
பள்ளிகளிலேயே தொடங்கி - பண
மாசைப் பொதித்தது அரசியல்..

மதிப்பெண் பெற்றவன்
செருப்பு துடைக்கிறான் - பண
மதிப்பு மிக்கவன்
மருத்துவம்படிக்கிறான்...

கல்விக்குச் செலவிட்ட
பாழும் பணத்தை
வாழும் மனிதரிடம்
வாங்கிக் கொழுக்கிறான்...

சில்லறையில் சிக்கிய
சிதறுண்ட கல்வியால்
கல்லறையில் சிக்கி
கண்ணீர்வடிக்கிறது மனிதம்....

விலையற்ற கல்வியும்
காசுபார்க்கப் பணிந்ததில்
கலைமகளும் இங்கே
விலைமகளாய்ப்போனாள்....

எல்லாம் காசாகிப்போனது
இந்த பூமி -இதில்
செல்லாக்காசாகிப்போனது
நம் வாழ்க்கை...

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சதி...


ஏனோ இவ்வாழ்க்கை
இனிமையானதாய் இருக்கவில்லை
இக்கணத்தில்...

பால்க்காரனின் பரிவுப் பேச்சும்
ஆட்டோக்காரனின்
அன்பான உரையாடலும் கூட
இரட்டை அர்த்த வசனங்களாகவே
இதயத்தைக் காயப்படுத்துகின்றன...

வற்றாத நீரூற்று
வழிந்தெங்கோ ஓடுவதாய்
உற்றாரின், பெற்றோரின்
குற்றப்பார்வைமுன் கூனிக்குறுகுகின்றேன்...

கைம்பெண்ணெனக்
க(ல)ளவாட முனைவோரும்
உடனிருந்தே என்
உயிரறுக்கும் கூட்டமும்....

இன்றா? நாளையா? என்று
இழுத்தடிக்கப்படும்

சமச்சீர்க் கல்வியின்
புதிய பாடத்திட்டம்போல்
விழிக்கிறது வாழ்க்கை...

கண்ணகி கைம்பெண்ணான
கதையில் விடுபட்ட பகுதியாய்....
இளம் விதவைகளின்
தீக்குளிப்புப் போராட்டம்....

ஒருவேளை
உடன்கட்டை ஏறும் வழக்கம்கூட
இன்றும் இருந்திருக்கலாம்....?!