வியாழன், 17 பிப்ரவரி, 2011

வாக்குச்சீட்டு




சாலையில் ஆங்காங்கே
சிற்சில பிச்சைக்காரர்கள்..
ஜடாமுடி தாடியுடன்
பலநாட்கள் சுத்தம்செய்யாத
அழுக்குடம்புடன்...
கையில் அனுமதிச்சீட்டுடன்
வரிசையில் நின்றனர் உணவுக்காக...

வீதியெங்கும் குழல்விளக்கு
அலங்காரங்கள்...
வாக்குப்பிச்சை கேட்ட
தலைவரின் சுவரொட்டிகள்...

ஊரே பற்றி எரிந்தது...
பற்பல அலங்கார
வெளிச்சப்பந்துகளில்...
அந்தப் பளீர் வெளிச்சத்தில்
அவர்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள்...

வீதியெங்கும்
பலகோடிப் பிச்சைக்காரர்கள்...
ஜடாமுடிதாடியற்று
பலநாட்கள் சுத்தம்செய்யாத
மன அழுக்குடன்..
வரிசையில் நின்றனர்
கையில் வாக்குச்சீட்டுடன்
ஓட்டுக்கு 500 பணமாம்...

ஆமாம் அந்தப் பளீர்வெளிச்சத்தில்
அவர்கள் தேடிக்கொண்டிருந்தது
எங்கோ பல மைல்களுக்கு அப்பால்
இருட்டில் தொலைத்த ஜனநாயகத்தை....
 நன்றி : படங்கள் - தமிழ் மக்கள் குரல்