வியாழன், 23 ஆகஸ்ட், 2012

ஒப்பாரி


வீதியெங்கும்
தோற்ற மறைவுக் குறிப்புகள்
செதுக்கப்பட்ட
பலகோடிக் கல்லறைகள்...

மலர்ந்து சில நாட்கள்கூட
நிறைவுபெறாத
பல்லாயிரம் உயிர்கள்
சமாதியினடியில்
சமாதானம் பேசிக்கொண்டிருந்தன

அதனிடையே
காதலின் ஒட்டுமொத்த
தகிப்பில் கரைந்துகிடந்தன
அந்த உடல்கள்... முன்பொருநாளில்...

அவள் அவனாயும்
அவன் அவளாயும்...
உருமறந்து பிதற்றியது
காதல்..

இப்பொழுது
அவளைப்புதைத்த குழியில்
நடுகல் நட்டுக்கொண்டிருந்தான் அவன்...
அவன் கல்லறைக்கு
மலர்வளையம்
வைத்துக்கொண்டிருந்தாள் அவள்...

மார்பிலடித்தபடி
கதறியழுதுகொண்டிருந்தது
காதல்...

வியாழன், 3 மே, 2012

தடம்..






உன் சன்னதி 
மிருகத்தை மனிதனாக்குகிறது..
மனிதனை ஞானியாக்குகிறது... 
பின்னர் கடவுளாயும்.. 


என் கவிதைகள் 
தீண்டவியலாத 
அயல்கிரகத்து
மாளிகையில் நீ 
அயர்ந்துகொண்டிருக்கிறாய்...

உன் வாசல்வரை
பயணித்து உன்னால்
வாசிக்கப்படாமலேயே
திரும்பிவிடுகிறது
என் கவிதை... 

உன் தடத்தைப் பின்பற்றுவோர் பக்தர்கள்...
உன் பாதத்தைத்
தொட்டுணர்வோர் சித்தர்கள்...

படைத்தது நீ....  
ஆனால் பகுத்தது..? 

பதில் வேண்டுபவர்க்கு
பதிலாய்க் கேள்வி கிடைக்கிறது...
உனக்கென்ன தகுதி...? 

பக்தனின் கண்ணீர் 
சித்தனுக்கே கேட்பதில்லை...
பின்னர்
புத்தனுக்கு எப்படிக் கேட்கும்..?? 

பகுதி விகுதிகளைப்
பரிசீலிக்கும் முன்னரே
தீர்க்கப்பட்டுவிடுகிறது
என் தகுதி... 

வாழ்க்கைச் சக்கரத்தில் 
சுற்றிச்சுற்றி வந்தாலும் 
உன் தடத்தைச்
சந்திக்க முடிவதில்லை - என்றாலும்
உன்னைத் தவிர வேறொன்றைச்
சிந்திக்கவும் மனம் ஒப்பவில்லை...

உன்னைத் 
தொட்டுணர முயன்று
தோற்றுப்போன
தீண்டத்தகாத வார்த்தைதான்
இந்தக் கவிதையும்...

திங்கள், 9 ஜனவரி, 2012

வேசம்...


யார் யாரோ அந்த
வருகைப் பதிவேட்டில்
தம்மைப் பதிந்துகொள்கிறார்கள்...

சில வரவுகள் மீது
பலருக்கு சந்தேகம்...
சிலருக்குத் தம் வரவில்கூட...

ஆரம்பவிதிப்படியே
அத்தியாயம் துவங்குகிறது...
பின்பு விதிகள் தத்தமக்கென
துவக்கப்படுகின்றன...

பலர் தமக்கான வாழ்க்கையைத்
தாமே தேர்ந்தெடுக்கிறார்கள்...
சிலர் பிறர் வாழ்வைத்
தமதாக்கிக் கொள்கிறார்கள்...

எல்லாமும் தமக்காய் இருப்பதே
எல்லோரின் ஏக்கமும் - ஆனால் இதுவரை
எதுவும் எதுவாயும் இருந்ததேயில்லை...

எதிர்பார்ப்புகள்கூட
எதிர்ப்புகளாகிவிடுகின்றன
சிலருக்கு..
பலருக்கு எதிர்ப்புகளே
எதிர்பார்ப்பாயும்...

ஏமாற்றுவோர் ஏமாற்றுவதற்காகவும்
ஏமாளிகள் ஏமாறுவதற்காகவும்
இதைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர்...

இறுதிவரை யாரும் தம்
சுயத்தை அடையாளப்படுத்துவதில்லை...
அதை விரும்புவதுமில்லை... 

எல்லோரின் சுயமும் அந்தக்
காணாமல்போனோரின் பட்டியலில்
தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது... 
 
உண்மைதான்...
எல்லோரும் அந்த வருகைப்பதிவேட்டில்
தம்மைப் பதிந்துகொள்கிறார்கள்...
எப்பொழுதும்போல ஆரம்பவிதிப்படியே
அத்தியாயங்கள் ஆரம்பிக்கின்றன... 

பலர் தமக்கான முகமூடிகளைத்
தாமே தேர்ந்தெடுக்கிறார்கள்...
சிலர் பிறர் முகமூடிகளைப்
பிடுங்கி அணிந்துகொள்கிறார்கள்...

வெள்ளி, 6 ஜனவரி, 2012

கிழிசல்

ஏழரைக்கோடிகள்
நிறைந்த சமுதாயத்தை
வெறும் ஒன்றரைக்கோடி
ஒன்றுக்கூடிக்
காறித்துப்பிய கதை...
தமிழ்ச்சரித்திரம் தெறிக்க
தமிழீழம் உமிழும்
அந்தக் காதை...

இறையாண்மைக் கதைபேசி
இருக்கும் மனிதம் தொலைத்து..
இந்தியம் எனும்
வீரம் தொலைத்தோம்...

ஒட்டுக்குழுக்களாய்
உடைந்துபோய் கிடக்கிறோம்...
தட்டுத்தடுமாறி
சிதைந்துபோனது சுதந்திரம்...

தன்னலச் சாக்கடையில்
சிக்கித் தவிக்கிறது நம்பிக்கை...
உன்னலம்பாராட்ட
ஊனப்பட்டது தமிழீழம்...

இனமான
எழுச்சிப்போரென்று
வெறும்கதை பேசிப்பேசி
பல லட்சம் மக்களை
ஏதிலிகள் ஆக்கினோம்..

சிலலட்சம் மக்களின்
சிதிலம் தொலைத்தோம்...

உணர்ச்சிமிகு தமிழா
எழுந்துவா தமிழா...
கூக்குரல்கள் வெறும்
கூச்சலாகிப்போனதிங்கே..

தமிழனாகவே உன்னால்
ஒன்றுபட இயலவில்லை..
மேலுக்கு ஏன்
இந்த இந்தியம் எனும் வெங்காயம்...?!

மீளாத் துயரில்
யாம் பெற்ற வேதனையில்
உலகம் அழுதது..
அதைக்கண்டு எம்
இந்தியம் சிரித்தது...
உண்மையில் உள்ளன்பு
ஒற்றுமையாய் இருந்திருந்தால்
உதவிக்கு இன்னும் சில
மாநிலங்கள் வந்திருக்கும்...

செத்துப்போன அவ்வுலகில்
நீதி ஜெயித்திருக்கும்...
பித்துப்பிடித்த இளைஞர்தம்
வாழ்வு ஜொலித்திருக்கும்...

ஊர்வலம், உண்ணாவிரதம்
பொதுக்கூட்டம் என்று பல
நாடகங்கள் அரங்கேற்றம்...
ஊடகங்கள் திசைமாற்றம்...

சொந்தத் தொலைக்காட்சியில்
சொந்தங்கள் தொலைந்த கதை
சொல்ல மறுத்ததில்
கூனிக்குறுகி முக்காடிட்டது
எம் தேசப்பற்று

உங்கள்
சுயலாபப் பித்தில்
அவர்கள்
சுதந்திரம் பறிக்கப்பட்டது...

ஈழ மக்கள்
திருப்தியடைந்ததாய்
சகட்டுக்கு பேசி
சரித்திரம் தொலைத்தோம்...

மகிழ்ச்சியடைந்ததான்
ராஜபக்ஷே...

பிணந்தின்னு கழுகுகூட
இறந்தபின் சதையுண்ணும்..
இனந்திண்ணி பக்ஷேயோ
இருக்கும்போதே
இரத்தம் குடித்தான்...

அவலங்களைத் தாங்கி
அறப்போர் செய்யும் வேளையில்
கோஷ்டிப்போசலில்
குற்றம் புரிந்ததால்
நீதிதேவதையின்
நெற்றியை பிழந்தது விதி...
வெற்றியடைந்தது சதி...

இன்னும் 
சொல்லத்தான் துடிக்கிறது..

துயரப்படும் ஈழச்
சகோதர்களுக்காய்
இப்பொழுதும்
என்ன செய்து
கிழித்திருக்கிறோம் நாம்...?