திங்கள், 22 ஆகஸ்ட், 2011

சதி...


ஏனோ இவ்வாழ்க்கை
இனிமையானதாய் இருக்கவில்லை
இக்கணத்தில்...

பால்க்காரனின் பரிவுப் பேச்சும்
ஆட்டோக்காரனின்
அன்பான உரையாடலும் கூட
இரட்டை அர்த்த வசனங்களாகவே
இதயத்தைக் காயப்படுத்துகின்றன...

வற்றாத நீரூற்று
வழிந்தெங்கோ ஓடுவதாய்
உற்றாரின், பெற்றோரின்
குற்றப்பார்வைமுன் கூனிக்குறுகுகின்றேன்...

கைம்பெண்ணெனக்
க(ல)ளவாட முனைவோரும்
உடனிருந்தே என்
உயிரறுக்கும் கூட்டமும்....

இன்றா? நாளையா? என்று
இழுத்தடிக்கப்படும்

சமச்சீர்க் கல்வியின்
புதிய பாடத்திட்டம்போல்
விழிக்கிறது வாழ்க்கை...

கண்ணகி கைம்பெண்ணான
கதையில் விடுபட்ட பகுதியாய்....
இளம் விதவைகளின்
தீக்குளிப்புப் போராட்டம்....

ஒருவேளை
உடன்கட்டை ஏறும் வழக்கம்கூட
இன்றும் இருந்திருக்கலாம்....?!

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

காலி

 அழகிய நேர்த்தியான
வேலைப்பாட்டுடன் மிளிர்கிறது அது....
கூடவே கூடுதலாய்
பகட்டுத்தனமும் திமிரும்...
அதற்கென உயிரேதுமில்லை...
உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை...
வாக்கெடுப்பில் வென்றால்

அதில் அமர்ந்துகொள்ளலாம்...

அமர்வதற்கோ ஆட்டுவிப்பதற்கோ
வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை...
அது அதை எதிர்பார்ப்பதுமில்லை...

தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லூறுகள்
அதில் அமர்ந்துகொண்டே
வாக்களித்த சடலங்களைக்
கூறுபோட்டு உண்ணலாம்....

வெ(ற்)றிக் கூத்தாடியபடியே
சிலகாலம் அதிலேயே ஓய்வெடுக்கலாம்...
கூத்து ஓயும்வரை கூட...

இப்பொழுதும் கூட
நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது
அந்த நாற்காலி...
இன்று அமர்பவர்களும்
இனியொரு நாற்’காலி’ யென்று...  

நீதி :  1) பல்லக்கில் வைத்தாலும் பாம்பின் குணம் மாறாது...
          2) வழியெங்கும் மாலை, மரியாதை - சுடுகாட்டுப்பிணம்....