புதன், 22 டிசம்பர், 2010

சண்டைக்கோழி

ஆயத்தமாகிவிட்டன அவை...
சுற்றியுள்ள சமூக அவலங்களைத்
திலகமிட்டபடி...

புத்தம்புது திட்டங்கள் - மாந்தர்
நித்தம் இனிது வாழ
தத்தம் கழுத்தில் கட்டிய
கங்கணத்துடன்
களமிறங்கத்தொடங்கின..

ஊழலைக் கருவருக்க
காலில் கட்டப்பட்ட
கத்தியுடன் மோதின...

பலகோடிப் பார்வையாளர்கள்
கையில் வாக்குச்சீட்டுடன்
வாய்க்கு வாய்க்கரிசி வேண்டி..

வென்றது ஒன்று..
தோற்றது கறிசமைக்கப்பட்டது...
வென்றது தன்னை மகிழ்வோடு
கொண்டாடிக்கொண்டது...
ஊழலறுக்க வேண்டிய கத்தி
ஊழல்கத்தியானது...

வெற்றி தம்பட்டமடிக்கப்பட்டது
ஊரெங்கும் சுவரொட்டிகள்
கழுதைக்கு உணவாகின...

ஆனால்
நெற்றியில் அழிக்கப்பட்ட
திலகத்தையும், கழுத்தில்
கழற்றி எறியப்பட்ட
கங்கணத்தையும் யாரும்
கண்டுகொள்ளவில்லை...

நீதி :

கூத்துப் பார்க்கும்
கூட்டமிருக்கும்வரை
குரங்குகளுக்கு கொண்டாட்டம்

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பொய்...


(நண்பர் துரையவர்கள் வரிகளின் பாதிப்பில்... )

மேலும் தொடரவழியற்று
தத்தளிக்கிறது வாழ்க்கை...

வறுமை பிச்சை கேட்டது..
பணமோ
வறுமைக்குப் பிச்சையிடத்
தயாராயில்லை...

மறுக்க முடியவில்லை...
இயலாமை நெஞ்சில் சாட
வழியற்று வாழ்வு
இரையாகிவிடுகிறது...
பொதிந்துவிடுகிறது அந்த
முகமூடிக்குள்...

யாருக்காகவோ எதற்காகவோ
தோண்டப்பட்ட குழி..
இடுகாட்டில் சிரித்தபடி... ..

என்னாலும் முடிகிறது
உதடுகள் சிரித்தபடி...
உண்மைகள் அழுதபடி...

என்னசெய்ய..?
பொய்ப்பிம்பங்கள்
மனதைச் சாட
வெட்கி மனம் நொந்து
வழியின்றி அணிந்துகொள்கிறேன்...
அந்த முகமூடி..

விற்கவோ... வாங்கவோ...
பேசவோ... ஏசவோ...
பாசத்திற்கும் நேசத்திற்கும்கூட
தேவைப்படுகிறது
இந்த முகமூடி...

வாழ்வின் அத்தியாவசியத்
தேவைகளாய் அது
லாடம் கட்டப்பட்டுவிட்டது...
இனித் தவிர்க்கவியலாது...

சுயலாபத்திற்காக பிஞ்சிலேயே
பொருத்தப்பட்டுவிடுகிறது..
பொய் எனும்
அந்த முகமூடி...

திங்கள், 13 செப்டம்பர், 2010

லஞ்சமெனும் பரிகாரம்

தகுதிக்கு மீறின ஆசைகளுடன் ...
கற்பனைகளுடன் அந்த
வழிபாடுகள் தொடங்கின...

"மதிப்பெண் குறைவுதான் என்றாலும்
மருத்துவனாகனும் என் மகன்..."
"அரசுப்பணி எனக்கே எனக்கு
அள்ளித்தா பாரதமாதா..."

"இந்த முறையேனும் அந்த
இனிய வாய்ப்பு தாராய்.." யென
ஏழைகள் சலுகைகளையும்
ஏய்த்துப் பிடுங்கவும்கூட
பல்வேறு திசைகளிலிருந்தும்
பல்லாயிரம் வேண்டுதல்கள்...

"சாமியால் ஆவதில்லை - ஒரு
சாத்தானால் ஆவதுண்டு... "
சாமிகோவில்ப் பூசாரி பணத்திற்காய்
சாத்தான் பூசாரியானான்..

கூட்டம் முண்டியடித்தது...
பணம் கொடுத்தால்
பத்தும் நடக்குமென
பரிகாரம் சொன்னான் சாத்தான்..

பெட்டிகள் கைமாறின...
சில கருப்பாய் இருந்தன...
"பரவாயில்லை....
லஞ்சப்பணமிது... இதில்
கருப்பென்ன சிவப்பென்ன..?"
சிரித்தான் சாத்தான்..

அருகே
கதறிக்கொண்டிருந்த பெண்ணை
கத்தியால் குதறியபடி
உதிரம் உறிஞ்சி
ஆளுக்கொரு குவளை கொடுத்துத்
தினந்தோறும் பருகச் சொன்னான்...

இப்பொழுது எல்லாச் சாத்தான்களும்
உதிரம் உறிஞ்சிக் குடித்தபடி
மட்டற்ற மகிழ்வுடன் வெளியேறின....

ஆனால் பாவம்...
அங்கே குற்றுயிரும்
குலையுயிருமாய் பரதமாதா....

புதன், 8 செப்டம்பர், 2010

மனிதம்...

சாலையெங்கும்

சிதறியபடி பல
மனிதப்புழுக்கள்...

ஆங்காங்கே
சிதறிக்கிடந்த
ரத்தக் கிறுக்கல்களுக்கு
மத்தியில் மெல்லிய
ஓலத்துடன் ஒரு உயிர்
அஸ்தமித்துக்கொண்டிருந்தது...

பற்பல கடமைகள்
நினைவினில் கோலம்போட...
கண்களில் லேசான கண்ணீர்
சில எதிர்ப்பார்ப்புகளோடு...
காப்பாற்றப்படுவோம் என்ற
நம்பிக்கையோடு...
ஊசலாடிக்கொண்டிருந்தது
அந்த உயிர்...

இன்றோ நாளையோ
ஊசலாடப்போகும்
ஏனைய உயிர்கள்
வேடிக்கை பார்த்தன...

பரிதாபத்தோடு பல...
பறிதவிப்பில் சில...
ரத்தம் கண்டதில்
சித்தம் தொலைந்தபடி
சில பூச்சிகளென..
நிரம்பி வழிந்தது சாலை...

ஆனால் அந்த
உயிரைக் காக்க
ஒருவரும் தயாராயில்லை...

நிமிடங்கள் கடந்தன...
இப்போது
மரணமடைந்திருந்தது
மனிதம்...

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

யாருக்கும் வெட்கமில்லை...




ஊரே கண்கொட்ட
விழித்தபடி... - அவள்
மெ(மி)ன்குடில் வாசலை
வெறித்தபடி..

வறுமைக்கென அவள் தன்னைச்
சிறுமைப்படுத்தியிருக்கக்கூடும்..
கணவன் கயவனாகிப்போனதால்
கண்ணியம் தப்பியிருக்கக்கூடும்...

பெற்றோருக்கென
பிள்ளைக் கடனடைக்கவென்றோ...
பெற்ற பிள்ளைக்கடனடைக்கவென்றோ
பாதை மாறியிருக்கக்கூடும்...

ஊரே கவலையுற்றது...
அந்தக் கறைபடிந்த வாழ்வை எண்ணி...
வெட்கமில்லாதவள்..
வேசியென்று
வெட்கத்தில் தூற்றியது...

ஆனால்
அனுதினமும் அக்குடிலின்
நாசி நுகரும் அந்த
வேசிப்பயல்களைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை...

அவர்தம்மை
ஆண்மக்களென்று பீற்றிக்கொள்ள
யாருக்கும் வெட்கமில்லை...

*  *  *

* பஞ்சத்தில் பெண்வாட மஞ்சத்தில் தள்ளுவான்

   நெஞ்சத்தில் வேசிப் பயல்...

* பஞ்சணையில் நொந்து பறிதவிககும் பெண்மயிலை
   வஞ்சனையில் பேசும் உலகு...

வியாழன், 11 பிப்ரவரி, 2010

காத்துக்கொள்கிறேன்..



கவிதைபாட நேரமின்றி
காதல் பாடிக்கொண்டிருந்த
கல்லூரி நாட்களின்
கலங்காத கறையிலிருந்து...

வெந்நீர் வற்றிவிட
குளிர்நீரில் ஊறவைத்து
வெந்த உடலின்
சூட்டைத் தணிக்க
மந்த நினைவுகளில்
மீள்பதிவிட்டு
நொந்த நாட்களின்
சூட்சுமங்களிலிருந்து...

சூழ்நிலை மறந்து
வீழ்நிலைக்குச் செல்ல
சூழ்ந்துவிட்ட மேகமாய் - எனை
வீழ்த்த நினைக்கும்
சோம்பலிலிருந்தும்...

விண்மீனில் விழிபதித்து
பெண்மீனை நிலவாக்கி
கண்கொட்ட விழித்திருந்து
கவிதை ரசித்த இரவுகளிலிருந்து..

காத்திருந்த காலங்களைக்
கடவுளுக்காய் செலவிட்டு
நீத்திருந்து தினந்துடித்த
விடலை நிமிடங்களின்
விதியிலிருந்து...

அடுக்கடுக்காய் நேரமிருந்தும்
கடுகடுப்பாய்ச் செலவிட்ட
அந்நிய நினைவுகளின்
ஆழத்திலிருந்து...

முரண்பாட்டில் எனைச்சேர்த்து
உடன்படுத்தி எனைத்திருத்தி
பரண்கட்டில் படுத்துறங்கி - உன்னில்
கடன்பட்ட வினாடிகளின் காயத்திலிருந்து...
உண்மைக்குள் படுத்துறங்கி
உயிர்முழுதும் மெய்சிலிர்க்க
உன்மெய்க்குள் தொலைந்து
உயிர்முழுதும் சிலிர்த்த வினாடிகள்...

பெண்ணீரில் பரிணமித்து...
மண்ணீரில் மனந்தொலைத்து..
கண்ணீரில் கரைந்துபோன
காதல் துளிமீதான காமத்திலிருந்து....

காதல் உயிர்த்திருக்கும்
காலம்வரை...
உனக்கெனவே இந்த
ஊனுடம்பும், இன்னுயிரும்...

பிரிந்தபின் பிறிதொன்றென
சரியாது நம்காதல்...
புரிந்தபின்னேனும் உன்னுள்
சிரித்துக்கொள்...

ஒருநாள்
காத்திருத்தலும் சுகமெனக்
காலம் விதைக்கக்கூடும்...

காத்திரு கண்ணே காத்திரு...
உயிர் நீத்தாலும்
உன்மடி தேடித்தானிந்த
ஊனுறங்கும்.. காத்திரு....